Thursday 12 May 2011

தகிக்கும் காமம்



சோவென்று பெய்யும் மழை பிடிக்கும் உனக்கு உனக்குள் பெய்யும் மழையாகப்பிடிக்கும் எனக்கு#தகிக்கும் காமம்.

நம் தழுவலில் சிறைப்பட்ட காற்று அழுதது வியர்வையாக#தகிக்கும் காமம்

வெட்கம் வெட்கிக்கொண்டு ஓடியது நம் நிர்வாணம் கண்டு#தகிக்கும் காமம்

வாசலில் அள்ளித்தெளித்த ரங்கோலியாய் கிடந்தாய் நீ எனக்குள் வர்ணங்கள் நிரப்பிவிட்டு#தகிக்கும் காமம்

கை பிடித்த வண்ணத்துப்பூச்சியின் நிறம் போல உன் முத்தம் பிடித்து உதடுகளில் நிறமேற்றிக்கொண்டேன்#தகிக்கும் காமம்

தகனம் செய்யா காதல் இது எரியூட்டப்பட்ட காமம் இது#தகிக்கும் காமம்

காமம் இல்லாமல் காதல் வற்றிவிடும்;காதலே காமமாய் முற்றிவிடும்#தகிக்கும் காமம்

மழை பெய்த பின்னிரவின் குளுமை போல உடலெங்கும் நடுக்கம் பரவ என் மேல் பரவுகிறாய்#தகிக்கும் காமம்

உன் ஆடைகள் முகர்ந்து வீரியம் பெறுகின்றேன்;ஆடைகள் களைந்தே களைத்துப்போகின்றேன்#தகிக்கும் காமம்

மூங்கில்துளைகளில் பிறந்தது இசை;உன் காதுமடல்களில் சிந்தியது தேன்துளிகள்#தகிக்கும் காமம்

மகரந்தங்கள் சேர்ப்பித்த வண்டு நான்;நானே தேனுண்டு கிறங்கினேன்#தகிக்கும் காமம்

பனிசொரியும் புலர்பொழுதில் கத்தும் பறவையைப்போல ஆயிரம் முனகல் வெளியிட்டாய் நானோ வெறிகொண்டு கத்தலானேன்#தகிக்கும் காமம்

கிணற்றில் துள்ளிக்குதித்த மீனைப்போல கொடியுடலை வருத்தி எடுத்தாய்;என்னை மூழ்கடித்தாய்#தகிக்கும் காமம்

எல்லாம் முடிந்து அம்மா என்று நான் அரற்றுவது உனக்குப்பிடிக்கும்;தலைவருடி நெற்றியில் நீ முத்தமிடுவது எனக்குப்பிடிக்கும்#தகிக்கும் காமம்


..

..

Monday 2 May 2011

ஓய்வில் இருக்கின்றன வீதிகள்.

ஓய்வில் இருக்கின்றன வீதிகள்.

எந்நேரமும் சந்தடிகளால் நிரம்பிக்கொண்டிருந்தன
சூரியனின் கீழ்..
மிதியடிகளால் மிதிப்பட்டும்
வண்டி சக்கரங்களால் அழுந்தப்பட்டும்
குழந்தைகளின் பம்பரங்களால் குத்துப்பட்டும்
போதைபாக்கின் எச்சில் சுமந்தும்
இணைசேர துரத்தும் நாய்களைக்கண்டும்
ஓய்வற்று ஓடின வீதிகள்..

வீதிகள் கலவி செய்யும் முனையில்
அலைபேசியில் நித்தம் விடலை சமைத்த காதல்கதைகள் கேட்டும்
குழுவாய் திண்ணையில் அமர்ந்து கற்பின் தராசை அடுத்தவளுக்கு
நிறுத்தும் பெண்களின் ஒழுக்கம் அறிந்தும்
காலை புத்தகம் சுமந்த பிஞ்சைகண்டு வெம்பியும்
மாலை அது மொட்டவிழ்ந்ததை ரசித்தும்
சிரித்துக்கொண்டிருந்தன வீதிகள்..

ஒன்றாய் ஓடி ஒன்றாய் குதித்து வாழ்வின் ஆட்டத்தில்
பங்காளிகளான சகோதர சண்டையும்
நித்தம் காலை செல்லசிணுங்கலும்
மயங்கிய மாலையில் கூச்சலும் அடியும்
நிறைந்த குடும்பம் கண்டும்
சிந்தித்துக்கொண்டிருந்தன வீதிகள்...

பிறந்த கனவுகளும் இறந்த நினைவுகளும்
உறவாடும் நெஞ்சங்களின் கதைகள்
யாவும் தாங்கி ஓடின வீதிகள்..

சுமைதந்த நிகழ்வுகள் யாவும்
காற்றோடு அனுப்பி வானத்து காதலனிடம்
செவி சேர்ப்பித்துவிட்டு
ஓய்வில் இருக்கின்றன வீதிகள்..
                                                  

Friday 29 April 2011

என்னிடம் இருந்தன.


என்னிடம் இருந்தன பிரித்தறியாத நட்புமலர்கள்
ஓட்டை டவுசருடன் நுங்குவண்டி ஓட்டும் அய்யனாருடன்
வழிந்துவாரி மூக்குசளி ஒழுக
மின்னல்வேகத்தில் ஓடும் தனபாலுடன்
பாம்படம் மாட்டிய காதுடன்
மிரட்டலான அன்புடன் பள்ளிக்கு
அழைத்துச்செல்லும் கருப்பாயிஆயாவுடன்
நெஞ்சில் கள்ளத்தனம் புகும்வரை
திமிறத்திமிறக்கொஞ்சும் மஞ்சுளா அக்காவுடன்
மேனிலைப்பள்ளி செல்லும்வரை அத்தைப்பெண்ணுடன்
கல்லூரிகனாக்காலம்வரை செல்லமான அப்பாவுடன்
மனைவி வரும்வரை மடிபுகுந்த அம்மாவுடன்

கவனப்புள்ளிகளிட்டுச்சென்ற பருவங்கள்
பாவனைகள் சுமத்தி
உயிர்ப்பைக்கரைத்துவிட்டன
விலகியும் விலகாமலும் நின்ற உணர்வுகளை
வாக்கியங்கள் வென்றுவிட்டன.
..
..

Wednesday 20 April 2011

மனம் என்னும் நதி

மனம் என்னும் நதி

பல ஊற்றுகளின் எண்ணங்கள் சுமந்து
ஓடிக்கொண்டிருக்கின்றது என் மன நதி
வண்டல்களாய் குப்பையும் அழகாய் கூழாங்கற்களும்
சேகரித்துக்கொண்டு குளுமையாய் ஓடிக்கொண்டிருக்கின்றன பொழுதுகள்

என் கடல் எங்கே என்று நித்தம் தெரிந்த கேள்விக்கு
தெரியாத வழியில் தேடிக்கொண்டிருக்கின்றேன்

ஏக்கங்களும் ஆசைகளும் தேடல்களும்
அணைபோடாத நதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது
என் மன நதி

பாலங்கள் கட்டுமானித்து கதைகள்
பேசிச்சென்ற ஒற்றைமனிதர்கள் ஏராளம்
அவர்கள் என் உணர்வுகளுக்கு வழிப்பயணியாய் வந்தவர்கள்

என்னுள் குதித்து என் உணர்ச்சிகளில் முத்துகுளிப்பவர்கள் மீதமிருப்போர்

யாராயினும் என் நதியின் வளம் சேர்க்கின்றனர்

ஓடிக்கொண்டிருக்கும் என் மன நதி.