Friday 29 April 2011

என்னிடம் இருந்தன.


என்னிடம் இருந்தன பிரித்தறியாத நட்புமலர்கள்
ஓட்டை டவுசருடன் நுங்குவண்டி ஓட்டும் அய்யனாருடன்
வழிந்துவாரி மூக்குசளி ஒழுக
மின்னல்வேகத்தில் ஓடும் தனபாலுடன்
பாம்படம் மாட்டிய காதுடன்
மிரட்டலான அன்புடன் பள்ளிக்கு
அழைத்துச்செல்லும் கருப்பாயிஆயாவுடன்
நெஞ்சில் கள்ளத்தனம் புகும்வரை
திமிறத்திமிறக்கொஞ்சும் மஞ்சுளா அக்காவுடன்
மேனிலைப்பள்ளி செல்லும்வரை அத்தைப்பெண்ணுடன்
கல்லூரிகனாக்காலம்வரை செல்லமான அப்பாவுடன்
மனைவி வரும்வரை மடிபுகுந்த அம்மாவுடன்

கவனப்புள்ளிகளிட்டுச்சென்ற பருவங்கள்
பாவனைகள் சுமத்தி
உயிர்ப்பைக்கரைத்துவிட்டன
விலகியும் விலகாமலும் நின்ற உணர்வுகளை
வாக்கியங்கள் வென்றுவிட்டன.
..
..

1 comment:

  1. நெஞ்சில் எப்போதும் அழியாத இளமையின் வசந்த கால நினைவலைகளை கவிதையில் தந்திருக்கிறீர்கள்.
    ஞாபக மீட்டல்கள்- மீண்டும் என் பள்ளிப் பராயம் நோக்கி என்னை அழைத்துச் செல்கிறது.

    ReplyDelete